Tamizh Bibles translation and transliteration, இந்த வலைப்பூவில் தமிழ் பைபிள் மொழிபெயர்ப்பு அதனுடன் இணைந்த ஒலி பெயர்ப்பு  பற்றித் தெரிந்து கொள்வோம். இந்த செய்திகள் அனைத்தும் முனைவர் ப.டேவிட் பிரபாகர் அவர்கள் எழுதிய “கிறித்தவ தமிழ் நடையியல் நோக்கு” எனும் புத்தகத்தில் வரும் சிறு பகுதிகள்.

விவிலியத்தைச் சுட்டும் பெயர்கள்

விவிலியத்தைச் சுட்டுவதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சொற்கள் கிறித்தவத் தமிழில் பயன்படுத்தப்பட்டுள்ளன. பைபிள், மறை, வேதம், விவிலியம் போன்ற சொற்களும் சத்திய, திரு, பரிசுத்த ஆகிய அடைகளோடு சத்திய வேதம், திரு விவிலியம், பரிசுத்த வேதாகமம் போன்ற தொடர்களும், வேதாகமம் (வேதம் + ஆகமம்) எனும் தொகையும் விவிலியத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றுள் “பரிசுத்த வேதாகமம்” என்ற பெயரில் அச்சிடப்பட்ட வேதாகமமே பெரும்பாலும் வழக்கில் உள்ளது. அண்மையில் வெளிவந்துள்ள விவிலிய பொது மொழிபெயர்ப்பு “திரு விவிலியம்” என்ற பெயரைக் கொண்டுள்ளது. ஃபினிசிய  தேசத்து வணிகர்கள் ‘பப்பைர’ என்ற கோரைப் புல்லின் பட்டையைக் கிரேக்கத்திற்கு அறிமுகம் செய்தனர். இது எழுதுவதற்குத் தாள் போலப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பட்டைகள் ‘பீப்லாசு’ என்ற மத்தியதரைக்கடல் பட்டினத்திலிருந்து இறக்குமதியானதால் இடவாகு பெயராக பீபிலாக, பீபிலா எனக் குறிப்பிடப்பட்டுத் தொடக்கத்தில் பொதுவாக நூலையும், பின்னர்ச் சிறப்பாகப் பைபிளையும் குறித்தது. இது தமிழ் ஒலிபெயர்ப்புக்கேற்ப ‘விவிலியம் என அமைந்தது.

வேதம் என்ற சொல் ‘அறிவு அல்லது அறியப்பட்டது என்று பொருள்படும். ‘வித் என்ற சொல்லின் அடியாகப் பிறந்தது. ஆகமம் என்ற சொல். ‘ஆகமம்’ என்பது (ஆ = பசு, ஆன்மா: கமம் = வந்து சேருதல்) ஆன்மா இறைவனிடம் வந்து சேருதலைப் பற்றிக் கூறும் நூல் எனப் பொருள்படுவதையும், ‘ஆகமம்’ என்பது மந்திர தந்திர நூல்களையும் குறிக்கும் வழக்கு தமிழில் காணப்படுவதையும் வீ.ப.கா. சுந்தரம் எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார்.

“மறை” எனும் சொல் மறை பொருளாக இருப்பது என்று கருதப்படாமல், ‘மறுத்து நிற்பது’, பாவங்கள் இவையிவை என மறுப்பது என்ற பொருளில் கிறித்தவர்களால் பயன்படுத்தப்படுகிறது. மறை, வேதம், ஆகமம் மூதலிய சொற்கள் தனியாகவும், திரு, சத்திய முதலிய அடைகளோடு சேர்ந்தும் பயன்படுத்தப்பட்டிருப்பினும், “திருவிவிலியம்” என்ற சொல்லாட்சியைத் தரப்படுத்தி இப்பொழுது வழங்கி வருவதைக் காண்கிறோம்.

விவிலியத்தின் இரு பெரும் பகுதிகள் முறையே, ‘பழைய ஏற்பாடு’, ‘புதிய ஏற்பாடு’ என வழங்கப்படுகின்றன. பழைய ஏற்பாட்டின் பெரும்பான்மையான பகுதிகள் கத்தோலிக்க மொழிபெயர்ப்பில் ‘ஆகமம்’ என்றே வழங்கப்பட்டுள்ளன. சீர்திருத்தப் பிரிவினர் பஞ்சாகமங்கள் எனப்படும் முதல் ஐந்து நூல்களை மட்டுமே ஆகமம் என்ற சொல்லால் அழைக்கின்றனர். கத்தோலிக்கர் மொழிபெயர்ப்பில் அரசர் ஆகமம் எனப்படுவது சீர்திருத்தப் பிரிவினரின் மொழிபெயர்ப்பில் “ராஜாக்கள்” எனப்படுகிறது. உன்னதசங்கீதம், உன்னதப்பாட்டு எனப்படுகிறது.

மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய இயேசுவின் சீடர்கள் எழுதிய புதிய ஏற்பாட்டுப் பகுதிகள் ‘சுவிசேஷம்’ என்ற பெயரிலும், இறைத் தொண்டரான பவுலடியார் பல்வேறு சபைகளுக்கு எழுதிய கடிதங்கள் ‘நிருபப் பகுதிகள்’ என்றும் ‘நிருப வாக்கியம்’ என்றும் அழைக்கப்படும் மரபைக் காண்கிறோம்.

‘ஆதியாகமம்’ பொது மொழிபெயர்ப்பில் ‘தொடக்க நூல்’ எனச் சுட்டப்படுகிறது. யாத்திராகமம் ‘விடுதலைப் பயணம்’ எனவும், உபாகமம் ‘இறைச்சட்டம்’ எனவும் , நாளாகமம் ‘குறிப்பேடு’ எனவும், சங்கீதம் ‘திருப்பாடல்’ எனவும் பொது மொழிபெயர்ப்பில் குறிப்பிடப்படுகின்றன.

‘சுவிசேஷப் பகுதிகள்’ தற்பொழுது ‘நற்செய்தி நூல்கள்’ எனப் பரவலாக வழங்கப்படுகின்றன. மோனகன் தம் விவிலிய மொழிபெயர்ப்பில் ‘அருட்செய்தி நூல்’ எனக் குறிப்பிட்டுள்ளார். நிருபப் பகுதிகள் ‘கடிதம்’ (ராஜரீகம் மொழிபெயர்ப்பு ‘திருமுகம்’ (கத்தோலிக்க மொழிபெயர்ப்பு, பொது மொழிபெயர்ப்பு) எனக் குறிப்பிடப்படுகின்றன. ‘அப்போஸ்தலர் நடபடிகள்’ திருத்தூதுவர் செயல்கள் (ராஜரீகம் மொழிபெயர்ப்பு) திருத்தூதுவர் பணிகள் (பொது மொழிபெயர்ப்பு? எனக் குறிப்பிடப்படுகின்றது. இறுதி நூலான ‘வெளிப்படுத்தின விசேஷம்’ திருவெளிப்பாடு (ராஜரீகம் & கத்தோலிக்க மொழி பெயர்ப்பு & பொது மொழிபெயர்ப்பு) எனக் குறிப்பிடப்படுகின்றது. பெப்ரீஷியஸ் தம் விவிலிய மொழிபெயர்ப்பில் இதனை ‘அறிவிப்பு’ எனக் குறிப்பிட்டுள்ளார் .

பெயர்கள்

விவிலியத்தில் மாந்தர்தம் பெயர்கள், இடப்பெயர்கள், அளவைப்பெயர்கள் முதலிய சொற்கள் பெரும்பாலும் ஒலிபெயர்த்து வழங்கப்பட்டுள்ளன. சில பெயர்களைக் கத்தோலிக்க மரபில் மொழிபெயர்த்து வழங்கக் காண்கிறோம். எ.கா. பேதுரு – இராயப்பர், யோவான் – அருளப்பர், பவுல் – சின்னப்பர், யாக்கோபு – யாகப்பா, அந்திரேயா – பெலவேந்திரர் முதலிய பெயர்கள் இவ்வகையில் குறிப்பிடத்தக்கவை.

பவர் ‘மாற்கு’ எனவும், மோனகன், லார்சன் ஆகியோர் ‘மார்க்கு’ எனவும் ஒலிபெயர்த்துள்ளனா். இலங்கை ஒல்லாந்தர் படைப்புகளில் பெயரின் இறுதிப்பகுதியில் மாற்றம் செய்து பயன்படுத்தும் போக்கு காணப்படுகிறது.

எ.கா.: இயேசுஸ், கிறிஸ்துஸ், மத்தேயுஸ்

இதனையொட்டி கத்தோலிக்கர் படைப்புகளில், மத்தேயு ‘மத்தியாஸ்’ எனவும் லூக்கா ‘லூக்காஸ்’ எனவும் வழங்கப்படுவதைக் காண்கிறோம்.

கிறித்தவ இலக்கியப் படைப்பாளர்கள் பெயர்கள் சிலவற்றைத் தம் விருப்பம் போல் ஒலிபெயர்த்தும், மொழிபெயர்த்தும் வழங்கக் காண்கிறோம். தேம்பாவணி கீர்த்தனை’யில் வீரமாமுனிவர் ஆதாம், ஜான் ஆகிய பெயர்களை முறையே. ஆதன் , சுவானி எனப் பயன்படுத்தியுள்ளார். தேம்பாவணியில் வளன், வாமன், சிவாசிவன், அறஞ்செயன், காந்தரி, நகுலன் ஆகிய பெயர்களையும் வீரமாமுனிவர் பயன்படுத்தியுள்ளார் .

பிறபெயர்கள்

இது போன்றே பாகால் (கானான் நாட்டு பழங்குடி மக்கள் வழிபட்டு வந்த ஒரு தெய்வத்தின் பெயர்), பஸ்கா (இஸ்ரஏலர் எகிப்து நாட்டிலிருந்து விடுதலையாகிப் புறப்பட்ட நிகழ்ச்சியின் நினைவாகக் கொண்டாடப்படும் பண்டிகை) இதன் பொருள் “கடந்து செல்லுதல்”. பேராசிரியர் பொன்னு. ஆ.சத்திய சாட்சி இதனைக் ‘கடப்புத் திருநாள்’ என்று குறிப்பிடுகிறார். பெந்தேகொஸ்தே (பஸ்காவிற்குப் பின் ஐம்பதாவது நாளில் கொண்டாடப்படும் அறுவடைக்காக நன்றி கூறும் யூதப் பண்டிகை, பெயல் செபூல் (பேய்களின் தலைவன்), பரிசேயர், சதுசேயர் (யூதச் சமயப் பிரிவினர்), இலேவியர் (கோவில் பணிகளில் உதவும் உரிமை பெற்றவர்), எப்பிக்கூரர் (எப்பிக்கூரஸ் என்ற தத்துவ ஞானியைப் பின்பற்றியவர்கள்), ஸ்தோயிக்கர் (சேனோ என்ற தத்துவ ஞானியைப் பின்பற்றியவர்கள்) போன்ற பெயர்களும், இடப்பெயர்களும் ஒலிபெயர்த்து வழங்கப்பட்டன.

மேலும், சில அளவைப் பெயர்களும் ஓலிபெயர்த்து வழங்கப்பட்டுள்ளன. தினாரியம் என்பது விவசாயக் கூலித் தொழிலாளியின் ஒரு நாள் கூலிக்குச் சமமான ரோம வெள்ளி நாணயம். ஒரு தாலந்து என்பது 6000 தினாரியத்திற்குச் சமம். (தாலந்து என்பது இன்றையக் கிறித்தவத் தமிழில் ‘திறமை’ என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது). இலேகியோன் என்பது ரோம ராணுவத்தில் 6,000 போர் வீரர்கள் கொண்ட படைப்பிரிவைக் குறிக்கும். இதுபோன்றே வடக்கிலிருந்து வீசும் புயற்காற்றைக் குறிக்கும் ‘யூராக்கிலோன்’ என்ற சொல்லும் ஒலிபெயர்த்து வழங்கப்பட்டுள்ளது. சீகன்பால்கு தினாரியம, தாலந்து ஆகிய சொற்களைப் ‘பொன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். கத்தோலிக்கர் மொழிபெயர்ப்பில் குறிப்பிடப்படும் ‘ஸ்தாத்தேர்’ எனப்படும் நாணயம் பவர் மொழிபெயர்ப்பில் ‘ஒரு வெள்ளி நாணயம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது (மத்தேயு 17:27. இதனைச் சீகன்பால்கு ‘கால்வராகன் காசு’ எனக் குறிப்பிட்டுள்ளார் .

இதுபோன்றே, ‘சிலுவை’ என்ற சொல்லும் ஓலிபெயர்க்கப் பட்டதாகும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் மட்டும் வழங்கப்படும் ‘சிலுவை’ அல்லது “சிலுபா’ என்ற சொல், சிரியன் சபைகளில் வழங்கப்பட்ட சிலிபோ (Slibo) என்ற சொல்லின் ஒலிபெயர்ப்பாகும். இது போன்றே ‘குருசு’ என்று வழங்கப்படும் சொல் குருக்ஸ் (Crux) எனும் லத்தீன் மூலத்தைக் கொண்டதாகும். இதுவே ஆங்கிலத்தில் ‘கிராஸ்’ என வழங்கப்படுகிறது.

சமயஞ்சார்ந்த கலைச்சொற்கள்

௮. ஒலிபெயர்க்கப்பட்ட சொற்கள்

எபிரேய, கிரேக்க மூலங்களைத் தழுவிக் குறிப்பிடத்தக்க சில சமய முக்கியத்துவம் வாய்ந்த சொற்கள் கிறித்தவத் தமிழில் ஓலிபெயர்த்து வழங்கப்பட்டுள்ளன. ஓசன்னா, ஆமென் , அல்லேலூயா போன்ற சொற்களை இவ்வகையில் குறிப்பிடலாம். ‘ஆமென்’ என்ற எபிரேயச் சொல்லுக்கு ‘அப்படியே ஆகட்டும்’ என்பது பொருள். ‘உறுதியாகவிருத்தல்’, ‘திட்டமாகவிருத்தல்’ என்றும் பொருள்படும். Hallelujah எனும் எபிரேயச் சொல் கிரேக்கத்தில் Alleluja என வழங்கப்பட்டது. இது தமிழில் கிரேக்க வடிவத்தில் ஓலிபெயர்க்கப்பட்டுள்ளது. இதற்கு ஆண்டவரைப் புகழுக’ என்பது பொருள். ‘ஓசன்னா’ என்ற சொல் HOSANNA என்ற எபிரேய மூலத்தைக் கொண்டது. இது மகிழ்ச்சியில் எழுப்பப்படும் குரல்: இதன் பொருள் ‘காத்தருளும் ‘ என்பதாகும். ஆனால் வழக்கில் இது வாழ்த்தைத் தெரிவிக்கப் பயன்படுகிறது.

ஆ. சமஸ்கிருதத்தில் ஆக்கிக்கொள்ளப்பட்ட சொற்கள்

கிறித்தவப் பொருளை உணர்த்த புதிதாக ஆக்கிக் கொள்ளப்பட்ட விருத்தசேதனம் (Circumcision), இராப்போஜனம் (Holy Communion), ஞானஸ்நானம் (Baptism) போன்ற சமய முக்கியத்துவம் வாய்ந்த சொற்களும் ஜெபம், அபிஷேகம், ஆராதனை, வேதபாரகர், தீர்க்கதரிசி, ஐயர் போன்ற சமயத் தொடர்பான பொதுவான சொற்களும் சமஸ்கிருத மொழியில் ஆக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. விருத்தசேதனம், இராப்போஜனம், ஞானஸ்நானம் முதலிய சொற்கள் கிறித்தவப் பொருண்மையில் பயன்படுத்தப்படுகின்றன..

ஜெபம் ‘மன்றாட்டு’ எனவும், ஆராதனை:வழிபாடு’ எனவும், வேதபாரகர் ‘வேத அறிஞர்’ எனவும், தீர்க்கதரிசி “இறைவாக்கினர்” எனவும், நியாயப்பிரமாணம் ‘திருச்சட்டம்’ எனவும், நியாயசாஸ்திரி ‘சட்ட அறிஞர்’ எனவும், பிரதான ஆசாரி “தலைமை குரு எனவும், விசுவாசம் ‘பற்றுறுதி’ எனவும், பிரசங்கம் ‘அருளுரை’ எனவும் கிறித்தவத் தமிழில் இப்பொழுது வழங்கப்படுகிறது. மோனகன் மொழிபெயர்ப்பிலேயே இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதுபோன்றே, ஆசீர்வாதம், காரியம், கிரியை, ஊழியம், களழியக்காரன், நித்திய ஜீவன், இரட்சிப்பு போன்ற கலைச் சொற்களும் கிறித்தவப் பொருளில் ஆளப்பட்டு வருகின்றன.

அன்றிக்ஸ் அடிகளார் சமய முக்கியத்துவம் வாய்ந்த சில சொற்களைப் போர்ச்சுகீசிய மொழியில் ஒலிபெயர்த்து வழங்கியதையும், பின்னாளில் நொபிலி அவற்றைச் சமஸ்கிருதத்திலும் தமிழிலும் மாற்றி அமைத்ததையும் சூ. இன்னாசி எடுத்துக் காட்டியுள்ளார்

அன்றிக்ஸ் – நொபிலி

லவுத்தீசிமு – ஞானஸ்நானம்

கொம்பெசாரித்தல் – உறுதிபூசுதல்

காந்திசிமோ சக்கிறமெந்து – நற்கருணை

மாத்திரிமோனியு – மெய்விவாகம்

இ. புதியபொருளில் ஆளப்படும் தமிழாக்கக் கலைச் சொற்கள்

தமிழில் ஆக்கப்பட்ட பல சொற்கள் சிறப்புப் பொருண்மையில் ஆளப்படும் நிலையைக் கிறித்தவத் தமிழில் காண்கிறோம். இச்சொற்கள் சாதாரணப் பொருளில் (Literal Meaning) அமையாமல், கிறித்தவச் சமயப் பொருண்மையைக் கொண்டவையாக விளங்குகின்றன.

எ.கா.:

  1. ஒலை வாசித்தல்? திருமணத்திற்கு முன்பு திருச்சபையில் அறிவிக்கப்படும் மண அறிவிப்பினைக் குறிக்கிறது.
  1. திடப்படுத்தல்: கிறித்துவின் மரணத்தின் நினைவாக வழிபாடுகளில் பகிரப்படும் அப்பம் மற்றும் திராட்சைச் சாற்றைப் பெற்றுக்கொள்ள (First Communion) தகுதிப்படுத்தும் திருச்சபை நிகழ்வைக் குறிக்கிறது. இது கத்தோலிக்கர் மரபில் ‘புதுநன்மை’ எனப்படுகிறது.
  1. மறுபடியும் பிறத்தல்: இத்தொடர் ஆழமான தத்துவப் பின்புலங்களைக் கொண்டதாயினும், ஒரு மனிதன் தன் பழைய வாழ்வை விட்டு இறைவனுக்குள் புதுவாழ்வை மேற்கொள்ளும் நிலையைக் குறிப்பதாகும். இது பிறவிச்சுழற்சிக் கோட்பாட்டையும், என்ற மூடநம்பிக்கையையும் தகர்ப்பதாகும்.
  1. ஓய்வு நாள்: Sabbath day என்ற பொருளில், பொதுவாக ஞாயிற்றுக்கிழமையைக் குறிக்கிறது.
  1. கடைசி நாள்: கடவுளின் இறுதித்தீர்ப்பு நாள் என்ற பொருளில் அளப்படுகிறது.
  1. திருநீறு மந்திரித்துப் பூசுதல்: கடந்த ஆண்டில் மந்திரித்த குருத்தோலையிலிருந்து தயாரிக்கப்பட்ட சாம்பர் திருப்பலியில் மந்திரிக்கப்பட்டுப் பூசப்படுதல். இத்தகைய சமய முக்கியத்துவம் வாய்ந்த சொற்கள் மட்டுமின்றி, சமயம் தொடர்பான சில சாதாரணச் சொற்களும் கிறித்தவப் பொருளில் ஆளப்படுகின்றன.
  2. உபதேசியார்: குருபட்டம் பெறாத, அருட்பொழிவு பெறாத நிலையில் வழிபாட்டை நடத்தும் பொதுநிலையினரைக் (Laity) குறிக்கிறது.
  3. சபை: அவையைக் குறிப்பிடாமல், ‘Congregation’ எனப்படும் திருச்சபையையே குறித்து நிற்கிறது.
  4. பலிபீடம்: ஆலய அமைப்பில் மேடைப்பகுதி அல்லது அருட்சாதனங்கள் வைக்கப்படும் மேசையைக் குறிக்கும். கடவுளுக்குக் காணிக்கையாக்கப்பட்ட ‘பலி’ இன்று தன் நேர்பொருளை இழந்த நிலையிலும் அதன் எச்சமாக இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனையொட்டிக் கத்தோலிக்க மரபில் காணப்படும் திருப்பலி, பாடற்பலி ஆகியன வழிபாட்டையே குறித்து நிற்கின்றன. பெர்சிவல் தம் மொழிபெயர்ப்பில் (1850) பலிபீடத்தை ‘வேதிகை’ என மொழிபெயர்த்துப் பயன்படுத்தியுள்ளார் …
  5. நற்செய்தி: நற்செய்தி என்பது கிறித்துவைப் பற்றிய செய்தி எனும் பொருளிலும், குறிப்பாக மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகியவர்கள் எழுதிய விவிலியப் பகுதிகளையும் குறிப்பதாகும்.

இதுபோன்றே கோயில்குட்டி, கோயிற்பிள்ளை ஆகிய சொற்கள் திருச்சபையில் துணைப் பணிகளை மேற்கொள்ளும் பணியாளர் என்று பொருள்படும். ‘கற்பனை’ என்ற சொல் கட்டளை என்று பொருள்படுவதாகும். ஞானத்தாய், ஞானத்தந்தை ஆகிய சொற்கள் முறையே God Mother, God Father என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளன. நல்லவெள்ளி, சாம்பல் புதன் ஆகிய சொற்களும் கிறித்தவப் பொருளைக் கொண்டவை. இத்தகைய பெயர்ச்சொற்கள் மட்டுமன்றிச் சில வினைச்

சொற்களும் புதுப்பொருளில் கிறித்தவத் தமிழில் வழங்கப்படுகின்றன. சந்தித்தல், தாங்குதல், கழுவப்படுதல், குணப்படுதல் போன்ற சொற்களை இவ்வகையில் குறிப்பிடலாம்.

‘தேவன் நம் தேவைகளைச் சந்திப்பார்’ என்ற தொடரில் சந்திப்பார் என்ற வினைமுற்று ‘நிறைவேற்றுவார்’ என்ற பொருளிலும், (தேவைகளைத்) தாங்குங்கள் என்ற வினைமுற்று “உதவுங்கள்” என்ற பொருளிலும் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுவதைக் கிறித்தவத் தமிழில் காணலாம். கழுவப்படுதல் என்பது அகத்தாய்மையைக் கருதிப் ‘புனிதப்படுத்தப்படல்’ என்ற பொருளிலும், குணப்படுதல் என்பது உடல்நலம் பெறுவதைச் சுட்டாமல் ஆன்மநலம் பெறுவது என்ற பொருளிலும் வழங்குவதைத் தமிழில் காண்கிறோம்.